Saturday, December 06, 2008

தொடக்கம் தேடும் முடிவு

கி.பி 2043:

மொட்டை மாடியை
முழுமையாக்கும் நிலவு!

நட்சத்திர பொடுகை
மேககூந்தலால் மறைக்கும்
வானம்!

மேனியில் வீணை மீட்டும்
மெல்லிய தென்றல்
மெல்ல இமைக்
கதவுகள் மூடின!

நாற்காலியில் இருந்து கொண்டே
நாற்பது ஆண்டுகள் முன்னோக்கி
பயணம் செய்தேன்!

வசந்த மரத்தின் துளிர்களை காண
நான்கு மாத விடுமுறையில்
நீர் ஊற்றினோம்!

கனவு சிறகுகளை தாங்கி
கல்லூரி வானில் பறக்க
தொடங்கினோம்!

கருவை தாண்டிய குழந்தையாய்
கல்லூரியில் முதல் நாள்!

கல்லூரிதேசத்தில் எங்கள்
வகுப்பு மாநிலங்கள்
பிரிக்கப்பட்டன
துறைகளின் பேதமின்றி!

தெரியாத இடத்திற்கு
தெரிந்தே நாடு
கடத்தப்பட்டோம்!

அரைமணி நேரம் நடந்த வகுப்பில்
அறிமுக படலம்
அரங்கேறியது!

Ragging அலைகளில் நனையாதிருக்க
நடந்து சென்றோம் நிறைந்த
எச்சரிக்கையோடு!

ராணுவ துப்பாக்கி கொண்டு
ரகசியமாக கட்டிடம் தகர்க்க
திட்டம் தீட்டினோம்! (Engineering Drawing)

மரத்திற்கும் இரும்பிற்கும்
உருவம் கொடுத்த
ஓவியர் ஆனோம்! (Workshop)

சக்கையாய் பிழிய
cycle test,
நடத்தாத பாடம்
Assignment' ஆக மாறும்
நாடகம்,
மெத்த படித்து
மொக்கை போடும்
மேதாவிகள் - இப்படி
கூட்டணி கட்சியால்
கொடுக்கப்பட்ட பதவியாய்
பயத்துடன் நகர்ந்தது
முதல் வருடம்!

இரண்டாம் முறை புதுப்பித்தோம்
இம்முறை எங்கள் துறையை
சேர்ந்தவர்களோடு!
தொடர போகும் இவர்களோடு
தொடுத்த முதல் மலர்களையும்
தொலையாமல் பார்த்துகொண்டோம்!

சுதந்திரமாக சுற்றி திரிந்த
எங்களுக்கு semster சிறையும்
சுவர்க்கமாக தோன்றியது!

ஆறு theory
இரண்டு practical
அளவு சாப்பாடு எம்
அறிவுக்கு!

கல்லூரி IT கடலின்
முதல் அலைகள் என்ற
கர்வம் சற்றே எங்களுக்கு
உண்டு!

புத்தக அறிவோடு
பொழதுபோக்கு அறிவையும் பெற
தொடங்கினோம்!

class bunk செய்து
cinema ஞானம் வளர்த்தோம்!

வாய்ப்புகளை வீணாக்காமல்
வெட்டி பேச்சு பேசினோம்!

கடலுக்கு சென்று
கல்லூரி நட்பை
கட்டி முடித்தோம்! (First time the whole class went to besant nagar beach)

கிரகப்பிவேசம் செய்தோம்
நண்பர்கள் நாங்கள்
கூட்டுக்குடும்பமாய்!

மூன்றாம் வருட முன்னுரையே
தெளிவுப்படுத்தியது வகுப்புக்கள்
இனி நட்பு பாடங்களுக்காக என்று!

இதழ் வலிக்காமல் பாடம் எடுத்து
இம்சைப்படுத்தினர் எங்கள் செவிகளை!

வயிற்றெரிச்சல் இடையில்
வரவழைத்தோம் எங்கள்
"Newsletter" ஐ
எரியும் கொள்ளியில்
எண்ணெய் ஊற்றி!

நட்பு மழையில்
நனைத்த எங்களை
உலர வைத்த
ஓரிரு ஊடல்கள்!

நாட்களும் நகர்ந்தன
நான்கமாண்டும் மலர்ந்தது!

சுற்றுலா சென்று வந்தோம்
சுகமான நினைவுகளை
ஈன்று எடுத்தோம்!

ஏழு நாட்கள்
ஏழு நொடியாய்
உருமாறியது!

Samurai cyclone' ஆல்
சற்றே பாதிக்கப்பட்டது
எங்கள் நட்பு மண்டலம்! (Whole tour we were listening to "Samurai" movie songs)

முடிந்த மழையின்
முடியாத தூறலாய்
Cadenza! (Symposium name)

Culturals, college day
என்று நட்பை
மெருகேற்றிய பொற்கொல்லர்கள்!

பிரியக்கூடாது என்று
பிறரிடம் கையெழத்து
பெற்றோம்
பிரிய போவதை
உணர்ந்து!

கல்லூரி வீணையில்
இசைத்த இந்த
நட்பு தந்திகள்
நீங்கின
மீட்டிய நட்பை
மனதில் இசைத்துக்
கொண்டே!

விழிகளின் நீரால்
நினைவுகளை நனைத்தேன்
மேகநீரால்
நினைவு பெற்றேன்!

மெல்ல நடந்தேன்
மீண்டு போனதை
மீண்டும் பெற்ற
உணர்வுடன்!






Monday, November 03, 2008


இருவர்

ஒரு மழை நாளில் தொடங்கியது
நம் நட்பு!

இருவருடைய இச்சைகளின்
எச்சங்களாய் நீங்கள்!

கவனக்குறைவு
கருவறை கதவு
திறந்து விட்டது!

ஒண்டுக் குடித்தனத்திலிருந்து
மிக பெரிய பிரபஞ்சத்திற்கு
கிரகப்பிவேசம் செய்தீர்கள்!

மணம் முடிக்காது மழலை கொண்டதால்
மாயத்து கொண்டாளோ மறத்தமிழச்சியாம்
உங்கள் அன்னை?

முதல் காட்சியாய்
உயிரற்ற உங்கள்
தாயின் முகம்!

"அரசு தொட்டில் ஆறறிவுக்கு மட்டும்" - என்றே
எங்களின் ஓரறிவுக்கு எட்டியது

தேசாந்திரம் சென்றிருந்த வான் மழை
திடீரென்று வீடு திரும்பியது!

குளித்து முடித்தும் குடிக்க கூழ் இல்லை
கசக்கி கட்ட ஓர் கந்தலும் இல்லை!

வண்டிக்கு உடை கொடுத்த மக்கள் - உங்கள்
வயிற்றுக்கு உணவு மறுத்தனர்!

குளிர் தாங்கா பிஞ்சென்றும் பாராமல்
விரட்டபட்டாய் ஒவ்வொரு வீட்டிலிருந்தும்!

கால் அழக்கு ஏற்கும் துணியிலும் உங்கள்
உடல் அழக்கு படாது பார்த்த
உத்தமர்கள் நாங்கள்!

ஆயிரம் சதுர அடியில்
அரை அடி தர மறுத்த
அன்பு தெய்வங்கள் நாங்கள்!

உடனிருப்போர் உள்ளம் புரியா
உயிருள்ள பிணங்கள் யாம்
உங்கள் தேவை அறிவோமா?

அலுவல் திரும்பிய ஆதவனால்
அன்னையின் கதகதப்பு அடைந்தீர்!

பசியென்று சொல்ல
மொழியும் திராணியுமின்றி
தவித்தீர்!

கடைசியாய்,
என் வீட்டு மாடிப்படி
உங்கள் படுக்கை அறையாய்
மாறி போனதில் மகிழ்ந்து
இருந்தேன்
மறுநாள் சாலையோரத்தில்
சமாதியாய் உங்களை
காணும் வரை!

சொர்க்கம் சேரும் வரை
உண்பதற்காக எடுத்து செல்லுங்கள்
உம்மிருவர்க்காக
நான் வாங்கிய இந்த
பிஸ்கட் துண்டுகளை!

Tuesday, April 22, 2008




தமிழ் சக்கரவர்த்தி




மழலைக் கவிதைகளுக்கு மத்தியில்
கவிதையே மழலையாய் அவதரித்தது
வடுகப்பட்டியில்...

எங்கள் கருப்பு சூரியன்
கால் பதிக்க சிவப்பு
கம்பளம் விரித்தன
வைகறை மேகங்கள்!

கவிதைக்கரம் பிடிக்க காத்திருக்கும்
இவன் எண்ணங்களை காதலிக்கும்
எழத்துக்கள்!

சாயம் போன வார்த்தைகளை
உன் எழதுகோள் உடுத்துவதில்லை
சுவை குறைந்த சொற்களோடு
சமரசம் செய்து கொள்ளுவதில்லை...

மௌனத்தையும்
மொழிப்பெயர்க்கும் உன்
மொழிகள் - அதை
மொழிப்பெயர்க்கும் பிற
மொழிகள் !

இல்லாதார்க்கு இல்லாததை
ஈவதே ஈகை!
அங்கனமே
உடல் கொடுத்தாய்
உணர்வுக்கு...
உணர்வு கொடுத்தாய்
உடலுக்கு...

இசை சிறகு விரிக்கும்
பாடல் பறவைகள்
இதயக்கூட்டில் வசிக்கின்றன!

தூரிகை விரலால்
கவிதை வரைகையில்
வானவிலாகிடும் வெள்ளை
காகிதங்கள்!

"ழ" பெற்ற தமிழாய்
நீ பெற்ற தமிழகம்!

தேசிய விருது அலங்கரித்த
உலக கவியே,
தொடக்கமில்லா வானமாய்
முடிவில்லாத உன்
புகழ்!

"ஈன்ற பொழ்தும்
பெரிதுவக்கும் ..."
என ஒலிக்கிறது குறள்..
திரும்பி பார்க்கையில்
தன் மகனுக்காக ஒலிக்கும்
தமிழ்த்தாயின் குரல்!