Friday, October 29, 2010

என்னுரை:
முதல் முறையாய் முதலும் முடிவும் இல்லா என் இறைவனைப் பற்றி ஒரு சிறு கவிதை...

காணிக்கை!

சாய்.....

சப்தக்கூண்டில் சிக்காத
சிட்டுக்குருவியை
சிறை வைத்திருக்கும்
நிசப்த வானம்!

இதயம் விரிய
இதழ்கள் குவிய
அலர்ந்திடும் மலர்!

அவன்
நேத்திரங்களின் பனித்துளியில்
நித்தமும் கழுவப்படும்
அடியவர்களின்
சூரிய வினைகள்!

அவன்
அதரம் வழியே
கசிந்திடும் கருணையை
ஏந்திப் பிடிக்கும்
எங்கள் கரங்கள்!

அவன்
கை விரல்
இடையில் தென்படும்
கால் விரல்களே
பாதையாகும்
விழியுள்ள குருடர்களுக்கும் !

மரம் விலகும்
இலையின் அமைதி
அணிந்திருக்கும்
அவன் முகத்தில்
உறங்கியே போகும்
எங்களின்
ஓராயிரம் கவலைகள்!

நம்பிக்கை நூல்
அறுந்துப்போன
மன ஆடையை
மீண்டும் மீண்டும்
தைத்து தருவான்
பொறுமையாய்!

இறைஞ்சுவும் வேண்டுமோ
எங்கள் எம்பிரானை?
வா என்று ஆணையிட்டாலே
வந்து நிற்பான்
சேவகனாய்!

போதும் என்றாலும்
உணவிடும் அன்னையாய்
ஓயாது அருள்
அளித்திடுவான் அன்புத்
தந்தையாய்!

நெருப்பைத் தவறி
மிதிக்கும் முன்னே
தட்டி விடுவான்
தோழனாய்!
மீறி தொடர்ந்தால்
தலையைக் குட்டிடுவான்
ஆசிரியனாய்!
பின்னே
கொப்பளங்களை அவனே
குணப்படுத்துவான்
களிம்பாய்!

மழலையின்
உறக்க சிரிப்பில்
மறந்து போகும்
உலகமாய்....
உன்னை தொழும்
நாங்களும்!

Saturday, October 23, 2010

என்னுரை:
சாயை மட்டுமே உலகமாய், உலகமே சாயாய் பாவிக்கும் அப்பாவிற்காக இந்த சிறு முயற்சி. கௌரிவாக்கத்தில் பாபா ஆலயம் அமைத்து சாயை எனக்கு மிக அருகில் கொணர்ந்த அப்பாவிற்கு நன்றி. இந்த ஆலயம் பற்றியும், அப்பாவைப் பற்றியும் மேலும் அறிய: http://www.shirdisaibabatemples.org/2009/04/shirdi-sai-baba-temple-gowrivakkam.html

அப்பாவிற்காக...


மறை வேதமாய்
மலர்ந்திட்ட எங்கள்
அப்பாவைப் பாட
மனிதன் கொண்ட
மொழிகள் போதவில்லை!

பனி உறைந்திருக்கும்
மேனியில்
உலாவிடும்
வைகறை மேகங்கள்!

ஆண்டவன் வசித்திருக்கும்
அவர் அகம்!
அன்பர்களுக்காக எழுப்பினார்
அவர் ஆண்டவனின்
அகம்!

தன்
நாவின் துனியால்
நித்தமும் சாயின்
நாம யக்னம்
செய்திருப்பார்
தளர்ந்த மனங்களைத்
தாங்கிடும் தாயுமானவர்!

சுற்றமெல்லாம்
சூனியப் பேச்சுகளை
சுவைத்திடும் வேளையில்
சக தோழனான
சாயோடு சம்பாஷித்திருப்பார்!

நாளெல்லாம்
பக்த சேவை
புரியும் பாபாவின்
களைப்பைப் போக்கும்
கலையைக் கற்றவர்!

வாசற்படியைக் கூட
தாண்டியதில்லை...
பெரு வெளியில்
நிகழ்பவை யாவும்
பெயரேடு கணக்காய்
வாசித்திருப்பார்!

"வா கண்ணா!" என
வாஞ்சையோடு விளிக்கையிலே
முகமற்ற உணர்வுகளால்
முகிழ்ந்திடுவோம்!

பெரிய திருமொழி
பொழியும் தருணம்
புகைமூட்டம் விலகி
இதயம் கண்ணீரால்
நன்றி சொல்லும்!

குழந்தையின் அமுதமொழிக்கு
குறையாது ஒலிக்கும்
எங்கள் குலம்
காக்கும்
பெருமாளின் குரலில்
குறையெல்லாம் தீர்ந்துபோகும்!

அறிவுரை அலர்ந்ததில்லை..
மந்திரம் பகர்ந்ததில்லை...
மலரடிகள் தவிர
வேறு கதியில்லை...

அனுதினமும்
அருள் அமுதை
அவர் சுரக்க..
வந்தோரின்
வயிற்றுக்கு அமுதை
இவர் படைக்க..
ஆலயம் கொண்ட
இருவரும்
அட்சய பாத்திரங்கள்!

சீரடிநாதனோடு
சேர்ந்து வாழா
பெரு வாழ்வை
சுட்டெரிக்கும் ஏக்கப்
பாலைவனத்தில்
பன்னீர் மழையாய்
இவரோடு
சம காலத்தில்
எங்கள் பிறவிப்
பயணம்!

ஸ்தூல தேகத்தில்
அவனை சேவிக்காத
எங்களின் ஊனக்கண்கள்
இவரையும் இறையெனக்
கொள்ள
உள்ளமெல்லாம்
நெகிழ்ச்சிப்பூக்கள்!

எழுதி முடித்ததும்
எனக்குள் ஒரு வினா
ஆண்டவனும் அப்பாவும்
நேரென கொள்வதோ?

அண்டத்தின் முதல் நொடி
அறிந்திடாத அறிவாக
படிக்க விரித்தேன்
பாபாவின் சரிதத்தை...

ஆச்சர்யம்...

அன்றே தெளிவாக்கப்பட்டது
அடியவனின் இன்றைய
சந்தேகம்!

முடிவற்ற பாபாவின்
முடிவான வார்த்தைகள்..

"நல்ல பக்தன்
யாவரையும்
நானென கொள்"