Saturday, July 19, 2014

சிறகு முளைக்கா சிட்டுக்குருவி

மண்ணால் செய்த 
ஒவியத்தை 
முடிக்கும் முன் 
அனுப்பிவிட்டான்
மேலே உள்ளவன்
மண்ணில் உள்ளவர்கள்
முடிக்கும் முன்னர்
மீண்டும் அவனே
எடுத்துக் கொண்டான்

வருடம் பல கடந்து
வயிற்றில் வந்த பிறையே
முழுமதியாய் முளைக்கும்
முன்னமே
பூமியில் தோன்றி விட்டாய்
முப்பது நாள்
முழுதாய் முடியவில்லை
வந்த இடத்திற்கே
சென்ற்து ஏனோ?

குவிந்த கரத்தோடு
சிவந்த பாதங்கள்
சிரசால் நடப்பதை
ரசித்து ரசித்து
இரவெல்லாம்
பகலாய் விழித்திருந்தேன்

அம்மாவென்று அழைக்க
வந்தவனே
இரண்டு மாதம்
பொறுத்திருக்கலாமே
அடம் பிடித்து
வெளியில் வந்தது
நீ தானே

மார்பின் காம்புகளில் உன்
ஈர உதடுகள் பதிய
பால் பருகாது
மீளாத் துயிலால்
பகலையும் சேர்த்து
இரவாக்கி போனாயே

வெறும் வயிறோடு
வெளியில் கூட
புறப்பட தகாது - நீ
வேறு உலகம்
செல்வது தகுமோ ?

கண்கள் விரிக்கவும்
காலால் உதைத்து
அழவும்
பழகவில்லை
ஆவி விடுத்து
அசையாது இருக்க
மட்டும் எங்கே
கற்றாய்?

இன்றலர்ந்த மலர்
விழ்ந்தாலே வலிக்கும்
உன் தேகம்
எப்படியப்பா பொறுப்பாய்
இருட்டையும் எரிக்கும்
நெருப்பை?
இதற்கு உன்னை
சுமக்காது இருந்திருக்கலாம்
என் கருப்பை!

அக்கினிக் குஞ்சு
அறியுமோ
அது எரிக்க போவது
அன்னையை கூட
அறிந்திடாத
மழலை பிஞ்சு
அறிந்தால் எரியாதோ
அதற்கும் நெஞ்சு!

சுவாசிக்க தெரியாத ,
சுவாசப்பை
சரியாக வளராத
சிட்டுக்குருவியின்
சுவாசம் எடுத்தது
சரியோ ?

நான் கருவுற்றிருக்க
கடவுளை கேட்டு கேட்டு
கடைசியில் கடவுளாகவே
மாறிய என்
அன்னையே!

தாய் வீட்டிற்கு
தலைப் பிள்ளையொடு
வருகிறேன்
வழியில் அவன்
உயிரை தொலைத்து
விட்டு!

மகளின் பிள்ளையை
தாய் வளர்ப்பது - நம்
மண்ணின் வழக்கம்
மகனை அனுப்பி
வைத்திருக்கிறேன்
பத்திரம்!
உறங்கும் முன்
உன்னை தரிசிக்க
வாசல் பார்த்திருக்கும்
விண்மீன்கள் -
உன்னை மேவும்
கற்பனையில் உறக்கம்
தொலைக்கும் பூக்கள்
வின் அங்கம்
தழுவ  காத்திருக்கும்
வின் அமுதம்

இருத்தலை தாண்டி
இல்லை வேறு வரம்
என்றறியா மக்கள் கூட்டம்
இன்னும் இன்னும் என
வேண்டிக் கொண்டே
இருக்கிறது

கதி மோட்சம் காண
குறுக்கு வழி தேடும்
கிறுக்கு உலகம்
கடவுளை அடைய 
கடவுளிடமே
கடவுச்சொல் கேட்கும்

குறைகளும் குழப்பங்களும்
நிறைந்த வாழ்வில் - அடைந்த
நிறைகளும் ஞானமும்
கானல் நீரினும் குறைவு - அதற்கு 
நன்றி சொல்வது அதனினும் 
குறைவு!

ஓயாத அலைகடல் மனம்
ஓய்வெடுக்க உண்டு
ஒரு மார்க்கம்- அது
பாபாவின் நாம
ஸ்மரணம்

அஷ்டாங்க யோகமும்
அகம் நோக்கும்  தியானமும்
அவசியமில்லை
புலன்கள்  போற்ற
புலராதோ அகத்தின்
கிழக்கு?

அழுக்காடை உடுத்திய அவதாரம்
அவனியில் அவன் ஏற்ற அரிதாரம்
தெரியாது அவனின் தாய் தந்தை
புரியாதோ அவனே நம் தாய் தந்தை

பால்வீதியும் சேவிக்கும் பாதார விந்தங்கள்
பகல் உணவுக்கு சுற்றியது மண் வீதியில்
இரை கேட்டு வந்தவன்
இறை என்று உணராது
உள்ளதை கொடுத்தவர் பலர்
உள்ளத்தையும் கொடுத்தோர் சிலர்

ஆகாரமோ ஆன்மீகமோ
அனைத்தும் வைக்கப்படும்
பொதுவாய்
கொள்பவர் கொள்ளலாம்
அவரவர் விருப்பம்
கதவு கிடையாது
அவன் அரண்மனையில்
நடமாடிய நாட்களில்
நடத்திய நாடகங்கள்
ஏராளம் ஏராளம்
நிலையாய் கொண்ட பின்
நிகழ்த்திய அதிசயங்கள்
தாராளம் தாராளம்

ஆத்ம ஒளி அளிப்பவனுக்கு
அகல் ஒளி பிடிக்கும் - பிடிக்காத
பனியாக்கள் எண்ணெய் மறுத்தால்
துனி என்ன தூங்கியா விடும்?
இணையாத தண்ணீர்
எண்ணெயோடு இணைய
மசூதி இருளும்
மன இருளும்
மறைந்தது ஒன்றாய்


இறைவன் படைத்த
மனிதர்கள் படைத்த 
மதத்தில் இவனை 
அடைக்க முயன்று 
தோற்பவர்க்கு தெரியாது
மண்ணில் வரும் 
மழைக்கு நிறம் 
கிடையாது என்று!

வாய் பேசா உயிரின் 
வயிற்று ஈரம் 
காக்கும் 
அடியவர்கெல்லாம் 
அடிமையாகும் இவன் 
அன்பின் ஈரம் 

பிராத்தனைக்காக குவியும் 
கரங்களை விட - பசித்தவர்க்கு 
பரிமாறும் கரங்களில்  
பிரியம் உள்ளவன் 

ஒரு முறை அவனை நினைக்க 
நம் உயிர் பிரிந்தாலும்
நம்மை மறவான் 
ஆலயம் வாரா  போனாலும்
அன்றாடம் நம்
வழிக் காண வருவான்
வழிகாட்ட வருவான்


தென்றல் விளையாடும்
மரத்தை 
சாய்க்க பார்க்கும் புயலில்
வேர்களை நம்பும்
விருட்சம் விழுவதில்லை
நதியாய் மாறி
அறுக்க நினைத்தாலும்
நம்பிக்கை நங்கூரமாகும்
இடத்தில் கவலைகள் 
நிற்பதில்லை


01 - பாபா - ப்ராத்தனை

உள்ளத்தின் தேவைகள்
உள்ளங்கையில் அடங்குவதில்லை 
எல்லையற்ற அவனிடம் விண்ணப்பிக்க 
எல்லையற்ற ஆசைகள் இருந்தும் 
எழுவதில்லை இதயத்தின் நாக்கு 
மழை மேகத்திடம் 
குவளை தண்ணீர் கேட்க 
தோன்றுமோ?
காலக்கடலின் கணக்கில்லாத அலைகளில் ஒன்று 
உதறிய ஒரு துளி நீரே உலகமென உணர்ந்தும் 
கண்ணிமைக்கும் நொடியில் கலைந்து விடும் 
கனவே வாழ்வென்று அறிந்தும் 
காம குரோத லோபங்கள்
கடித்து திங்கும் கண நேரமும்..
மண்ணில் மெய் மறையும் முன் 
மறையில் மனம் மறைய செய் 

எனது என்ற நெருப்பு இடையிறாது எரிந்து வர 
கறைபடிந்து கிடக்கிறது இதய சுவரெல்லாம் 
உதவியென்று வருபவை எல்லாம் சந்தேகக்கல்லில் 
உரசிப் பார்த்த பிறகே செய்யப்படுகிறது 
கலியின்  புயலில் அணைந்திடுமோ
கருணையின் தீபம்?
பேசா உயிரின் பசியை தணித்தவனே 
பேசும் எங்களின் மனப்பாசியை  நீக்கு 

குறையில்லா இயற்கையின் தானத்தைக் பெற்றும்
நிறையாத மானிட குடம்
குறைப்பட்டு கொண்டே இருக்கிறது தன்னில் 
குறைந்தவரை கண்டும்
ஒப்பிட்டு பார்த்து ஒப்பிட்டு பார்த்தே
ஓய்ந்து போகின்றன
கோதுமை அரைத்த கரங்களே - எங்கள் 
பேதைமை அரைக்க வா 

எல்லாம் நீயே என தெரிந்தும்
எப்பொழதும் உன்னை பார்க்க முடிவதில்லை
எதிலும் நீயே என புரிந்தும்
என்றும் உன் நினைவாய் இருப்பதில்லை
நிதமும் வெல்லும் மாயயை
நிரந்தரமாய் வென்றிட
உபாயம் உரைத்திடு
சரீர நிழலில்
சீரடி தெருவில் உலவிய 
நிர்குண பிறை - எங்கள் 
சரீரம் சாய்ந்த பின்னும் 
சிந்தையில் நிறை
அப்பாவிற்கு ஒரு அஞ்சலி

பன்னிரண்டு ஆண்டு கழித்து 
பாபாவின் மோன நிலை கலைய 
பௌர்ணமி தோன்றும் நேரத்தை நோக்கி 
நகத்தை கடித்தபடி 
காத்திருந்தது மண்

உள்ளே உருண்டு கொண்டிருப்பது 
உலகாளும் பெருமாளின் 
உள்ளாளும் பெருமாள் என 
கருவுற்ற தாய்
அகம் அறிந்தது  
நா நகல் எடுத்தது 

பிறக்கும் போதோ 
பால்யத்தின் போதோ 
பதின்மத்திலோ 
புலப்படவில்லை -
பாபாவின் செல்லப்
பிள்ளை இவரென்று 
பின்னாளில்  புரிந்தது 
பாபா இவருக்கு செல்லப் 
பிள்ளை என்று 

உயிர்கள் விளையாட 
பிரபஞ்சமெனும் வீடு 
செய்தான் இறைவன் 

அவன் விளையாட 
ஆலயமெனும் வீடு 
செய்தான் அடியவன் 

எண்ணம் வானமாகும் நேரம் 
எல்லாம் நம் காலடியில் 
சீரடி வாசனுக்கு இன்னொரு 
சீரடி கிடைத்தது 
கௌரிவாக்கத்தில் 

சேவை செய்ய வருபவனை பார்த்து 
சேவலும் விழி திறக்கும் 
செந்நிற ஆடையில் மேனி 
காலைக் கதிராய் மின்னும் 

அவன் அவருக்கு கொடுத்தது 
ஒரு பிறப்பு 
அவர் அவனுக்கு கொடுத்தது 
ஒவ்வொரு நாளும் 
ஒரு பிறப்பு 

அமர்ந்த நிலையில் 
ஆழ்ந்து உறங்குபவனை 
அன்னைக்கரம் வருட  
மெதுவாய் திறக்கும் 
நாளின் இமைகள் 

தாயாக நீராட்டி 
தலை துவட்டி 
அணியாய் அலங்கரித்து 
அமுதூட்டிய பின் 
அவனெதிரேலியே  
அமர்ந்து கொள்ளவார் 
சேயாக 

விடாது நோக்கும் கடலின் வண்ணத்தை 
வானம் காட்டும் சில நேரம்.
இவர் உடம்பிலும் 
அவ்வப்போது  
அவனின் முகம் 

மன அலைகள் மேலெழுந்து மேலெழுந்து 
விழிக்கரை நனைக்கும் 
உணர்வு நுரைகளில் 
கிளிஞ்சல்கள் கண்டெடுத்தே 
கரையும் பொழுதுகள் 

இதழ்கள் பிரிவதில்லை - அவ்விரு 
இதயங்கள் அகல்வதுமில்லை 
விழிகள் நான்கும் பேசுகையில்  
உதடுகள் என்பது உபரியே 

காய்ந்த நிலத்தில் 
புல் கூட முளைப்பதில்லை 
காய்ந்த வயற்றில் மட்டும்
பக்தி முளைக்குமா?

ஆலயம் சமைத்த நாளிலிருந்து 
அன்னமும் சமைய தொடங்கியது 
பசியென்று வந்த நின்ற எவரும் 
புசிக்காமல் போனது கிடையாது 
பசி அடங்காமல் போனது கிடையாது 
கருவறைக்கு பிறகு
அதிகம் விளக்கு எரிந்தது  
அடுப்பங்கரையில் தான். 

சுருதியும் லயமும் போதுமோ? 
ஸ்வரங்கள் வேண்டாமா? 
இனிப்பை சேரும் எறும்பாய் 
இவரை அடைந்த பிள்ளைகள்.. 
அகங்கள் நெருங்க நெருங்க 
அப்பாவின் தர்பார் 
அணுவென விரிந்தது 

ஒவ்வொருவருக்கும் ஒரு பணி 
இழைந்து இழைந்து செய்ய 
ஒவ்வொரு நெஞ்சிலும் பனி  
இங்கே
விதை ஒன்று 
விருட்சம் ஒன்று 
கிளைகள் நூறு 

இலக்கணங்கள் தேவையில்லை 
இளகும் மனது போதும் 
இவர் சன்னிதானத்தில் நுழைய ..

இயற்கையின் விதிகள் 
இயற்றியவனுக்கும் பொருந்தும் 
என்பதே விதி 

தள்ளி நின்றே ரசித்திருந்தவனை 
தனகத்தே கொள்ள விழைந்தான் 
வெய்யோன் 
தளிர்களின் பிடியில் 
தளர்ந்தது தலைவனின் 
பிடி  இரண்டு ஆண்டுகளுக்கு..

இனியும் பிரிந்திருக்கலாது என எண்ணி 
எடுத்துக் கொண்டான் அவன் பிள்ளையை
தந்து விட்டோம் எந்தையை..

கண்ணா என பனித்திடும் கண்ணும் 
கவலை தீர்க்கும் கரமும் 
காதலோடு ஆடும் கால்களும் 
கானல் நீராய் போனதே... 

உதிர்க்கின்ற திருவாய் மொழியும் 
உவகைமிகு ஆர்த்தி பாட்டும்  
உதி பூசும் காட்சியும் 
வெறும் கனவு தானோ 
இனி? 

அம்மா என்ற வார்த்தைக்குள் 
அகிலமே அடங்கும் - ஆனால் 
அப்பா என்ற சொல்லுக்குள் 
அம்மாவும் அடங்கும் 

தோன்றிய நாள்தொட்டு 
தழுவ காத்திருந்ததை போல் 
ஓடி வந்த அனலைக் கண்டு 
கனலானது கண்கள் 

வீட்டை நீங்கிய பிள்ளை 
மீண்டும் வந்ததை நினைத்து 
மேகமெல்லாம் மழையாய் சொரிய 

இவரோடு எம் காலம் இருந்தமைக்கு 
இதயமும் கை கூப்பி நன்றி சொன்னது 

முடிந்த இரவை தொடர்ந்த உதயத்தில் 
உண்மை நிறைத்தது உள்ளத்தில்... 
சூரியன் உதிப்பதும் இல்லை 
மறைவதும் இல்லை 


கௌரிவாக்கம்  பாபா கோவில் அப்பாவிற்கு