Thursday, December 31, 2009


போய் வா தோழி

மௌனமான கண்ணீரின் கனத்தை
தாங்கிடாது முறிந்து போன
ஒரு கிளையின் காட்சி
நின் தரிசனம் வேண்டி!


இன்றிரவை தொடரும் விடியலில் என்
நட்பின் இதயம் களவாடப்பட்டிருக்கும்
!

இறப்பற்ற காலத்தின் இறந்த கால
ஏட்டில் எழுத தயாராய்
நம் உறவு

நான் கொடுத்து நீ உடனே
படிக்கும் இந்த கடைசி
கவிதையில் இடம் பெற
மறுத்து என்னோடு
சண்டை பிடிக்கும்
வார்த்தைகள்...

முட்டி நிற்கும் சோகத்தின்
முடிச்சு அவிழ்க்க கற்றவளே,
கண்களுக்கு கனவு பாடம்தானோ
இனி உன் முகம்?

நெஞ்சம் நனைத்து நீ
வழிய விட்ட சொற்கள்
இனி காணாது போனவர்கள்
பட்டியலில்..

உறக்கத்தின் உதவியால்
உன் மேல் நான் சாய,
உதிர்ந்து போகும், உள்ளத்தில்
கூடு கட்டிய கவலைகள்!

செல்லம் என்று நீ என்னை
விளிக்க உன் உதட்டோரம்
காத்திருக்கும் என் காதுகள்!

இறுக பற்றும் உன் கரத்தின்
பிடியில் அழிந்து போகும்
என் மன அழுத்தங்கள்

பசலை அரவம் தீண்டலில்
பாழாய் போன எண்ணங்கள் !

வராத நேற்றை போல்
வாராது இருக்கட்டும் நாளை.

உலகத்து கடிகார முட்களை
ஒளித்து வைத்தால் இன்னும்
கொஞ்ச நேரம் என்னோடு
இருப்பாயா?

மேகமாய் மாறுவது
மழையாய் மடியவோ?

விரல் பிடித்து அழைத்து செல்லும்
அன்னையாய் என்னை உன்னோடு
கூட்டி செல்லாயோ?

கண்ணாடி பார்க்கும் கண்ணாடியாய்
நீளட்டும் நம் நட்பு


என் காதலியும்
உன் காதலனும்
மறந்து போக
நமக்கென்று ஒரு நாள்
வேண்டும்!

அழாதிருக்க முயற்சிக்கிறேன்
தோல்வியை அறிந்தே...
துடைக்க வா என் தங்கமே!!

முற்று பெறாத இந்த கவிதையாய்
முடிவு மறந்து இருக்கும்
என்றென்றும் உனக்கான என்
அன்பு!


Sunday, October 25, 2009

மார்கெட் பாட்டி

வாழக்கை வாழ்வதற்கே என்று
நள்ளிரவு வரை வகுப்பு எடுக்கும்
எங்கள் போதி கயாவிற்கு
விடுமுறை..

பெயரளவில் மென்மை கொண்ட
தகவல் தொழில்நுட்பத்தின் வன்மை
பழகி பார்த்தவர்களுக்கு மட்டுமே புரியும்

"பசு தோல் போர்த்திய புலி" - உவமானத்திற்கு
உயிர்க்கொடுக்கும் உயிரில்லாத் துறை.

இன்றேனும்,
கணிப்பொறி காதலியின் நினைவுகள் அகல,
நூலக மனைவியை நினைத்து
புறப்பட்டேன்..

மழைக்காலம் முடிந்து பனிக்காலம் பிறந்தும்
பிறந்தகம் மறந்து தன் மரத்தோழர்களை
தேடும் வெயிலில்
சுருக்கல்கள் நெய்த ஆடைக்குள்
கசங்கிய தேகம் ஒன்று
கடையோர வீதியில்
சுண்டை வற்றல்
விற்று கொண்டிருந்தது!

இதயத்தின் ஓரத்தில் படிந்திருந்த
நம்பிக்கையின் ஈரம்
இமை துவாரம் வழியே
வடிந்திருந்தது அந்த கடுகு
கண்களில்..

வெள்ளை சுவரில் தெரியும்
கருப்பு புள்ளியாய் இவளை
கடக்காத மனிதர்கள் அந்த
மார்கெட்டில் இல்லை...


பிழைப்பின் முகவரியாய்
பிச்சை விடுத்து
உழைப்பை கொண்ட
இந்த பாட்டியின்
முன் மண்டியிட்டேன்
விலை விசாரிக்க,

மனமும் மூளையும்
சேர்ந்து கருத்தரித்த
பதிலை
நுரையீரலின் காற்று
கொஞ்சம் கொஞ்சமாய்
மேலேற்றி தொண்டைப்படிகள்
தாண்டி அனுப்பியது

சைனீஸ், தந்தூரி
உணவிற்கு அடையாளமாய்
மாறிய கூட்டத்தை சேர்ந்த
எனக்கு
வாங்க தேவையில்லை
என்று தெரிந்தும்
வாங்கினேன்
அவள் வியாபாரத்தை
தொடங்கி வைக்க..

அமிழ்ந்திருந்த விழிகளை
வெளியில் அனுப்பி
நீட்டிய ரூபா தாளின்
விவரங்களை சரி பார்த்து
சுருக்கு பை வங்கியில்
சேர்த்து கொண்டாள்

பிள்ளைகள் அற்றவளா
பிள்ளைகளால் அற்றவளா?
எதுவானாலும்
இவளின் இன்றைய நாளின்
வறுமைக்கு எதிரியாய்
மாற முடிவெடுத்து
மறுபடியும் பணம்
கொடுக்க,
காந்தி சிரித்து
நன்றி சொன்னார்...


கூனிய முதுகை
நேராக்கி தன்
உடலெங்கும் தனித்திருந்த
பலம் மொத்தம்
குறுகிய உள்ளங்கையில்
குவித்து, அதை
மீண்டும் என்னிடமே
திணித்து,
சுயமரியாதை தெறிக்க,
"உழைச்சு வரது மட்டும்தான்
உடம்புலே ஓட்டும் தம்பி"

இப்போது காந்தி
உவகையுடன் நன்றி
சொன்னார் - அவள்
கரங்களில் தவழந்த
நொடிகளுக்காக..

உழைப்பின் நேர்மை
காட்டியது அவள்
நிழல்!
அதில் இளைப்பாறி இருக்கும்
எதிலும் இலவசம் கேட்கும்
என் மக்கள்..

நூலகம் போகவிருந்த
நான் வீடு திரும்பினேன்
புத்தகம் வாசித்த நிறைவோடும்
இதை மறந்து தொழில் தருமம்
பேசி கொண்டிருக்கும்
மனிதர்களுக்கு எப்படி
புரிய வைக்க வேண்டும்
என்ற யோசனையோடும்...

Sunday, October 18, 2009

இங்கே காணப்படும் எண்ணங்கள் யாவும் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு பதிலே தவிர சொன்னவர்களுக்கு எதிராக அல்ல...

ஆத்திகம், நாத்திகம், பகுத்தறிவு...
(பகுதி 1)

ஆத்திகம் என்றால்?
கடவுள் உண்டு என்பது ஆத்திகம். இது கிடையாது நான் சொல்லுவது. கடவுள் பெயரால் சக உயிரை நோகடிப்பது, எல்லோர் இடத்திலும் நீக்கமற நிறைந்து இருப்பது இறைவன் என்பது அறியாது இருப்பது, சாதி மத துவேஷங்கள் பாராட்டுவது - மேற்சொன்னவற்றை பின்பற்றாது, நாமும், நம்மை சுற்றி இருப்பதும், இருப்பவர்களும் இறைவனே என்று உணர்வது ஆத்திகம்...

ஆரம்பமே குழப்பமா இருக்குதே??
இந்த உலகத்தை படைத்தது இறைவன் என்றால், அவன் படைத்த ஒரு மனிதனை அல்லது உயிரை உடலால், பேச்சால், எழுத்தால், வஞ்சத்தால் காயப்படுத்துவது அவனை நீங்கள் காயப்படுத்துவது போல் தானே... ஐயா, நம்ம எல்லோரையும் உண்டாக்கியது அவன் என்றால், அப்ப நாம எல்லோரும் ஒண்ணு தானே. ஒரு அம்மாவுக்கு பிறக்கற குழந்தைகள் எப்படி வேற வேற ஜாதி ஆக முடியும்?

அப்ப ஜாதின்னு கிடையாதா?
நான் படித்த அல்லது அறிந்த வரையில், செய்கிற தொழில் கொண்டு வகுக்கப்பட்டதே இந்த ஜாதி... ஆனா இப்ப யாரும் எதுவும் செய்யும் யுகத்தில் எப்படி இது இன்னும் செல்லும்? கடவுள் மழை மாதிரி... பொதுவானவர். தயை கூர்ந்து உங்கள் அரைவேக்காடு பக்தியால் அவர் பெயரை பயன்படுத்தி பிறரை இம்சிக்காதீர்கள்.

இந்த காலத்திலும் சில ஆலயங்களில் அரிஜன மக்கள் எனப்படும் இனத்திற்கு அனுமதி மறுக்கப்படுவது குறித்து?

ஆழ்வார்களில் ஒருவர் சொல்லுகிறார்
இழிகுலத்தவர்களேனும் எம் அடியார்கள் ஆகில்
தொழுமினீர் கொடுமின் கொண்மின்

இப்படி செய்பவர்கள் கண்டிப்பாக கடவுளை நம்புகிறார்கள் என்று தோன்றவில்லை. இது கோயிலுக்கு மட்டும் இல்லை(இந்து மதம் மட்டும் அல்ல, எந்த மதம் இதை செய்தாலும்) ஏன் கடவுளை இருக்கு என்பவர்களுக்கு மட்டும் இல்லை. சீழ் படிந்த ஜாதி வெறி பிடித்து அழுக்காய் போயிருக்கும் மனம் படைத்த அனைவருக்கும் தான் - எப்பொழுது உணர போகறீர்கள் - நீங்கள் மனிதனாய் பரிணாம வளர்ச்சியற்று இருப்பதை?

ஒரே மதம் கொண்டவர்கள் கூட உள்ளுக்குள் அடித்து கொள்ளுவதை? (இந்து, இஸ்லாம், கிருஸ்துவம் - எங்கும் உள்ளது)
நண்பர்களே, தெரிந்த ஒரு விஷயம் தான், இருந்தாலும் சொல்லுகிறேன் - அனைத்து மதங்களும் கடவுள்களும் சொன்ன அடிப்படை செய்தி - அனைவரையும் நேசியுங்கள்,உதவி செய்யுங்கள். முடியாது போனால் - சுலபமான ஒன்று. யாரையும் துன்பத்திற்கு ஆளாகாதீர்கள். இதை விட்டு நமக்குள் யார் பெரியவர், சிறந்தவர் என்று அடித்து கொள்ளுவதில் பைசாவிற்கு கூட பயனில்லை.

கடவுள் மனிதனை பிரித்து வைத்து இருக்கிறதா?
யாரும் ஜாதி பாராட்ட கூடாது என்றும், இழிவாய் நினைத்தல் ஆகாது என்றும் ஒவ்வொரு மதத்தை சேர்ந்த தெய்வங்கள் கூறுகின்றன.உதாரணத்திற்கு, இந்து மத தெய்வம் நாராயணன் தன் அவதாரங்களில் - பிராமணனாய், க்ஷத்ரியனாய், யாதவனாய் பிறந்து உள்ளான். அவனை எல்லோரும் தொழுகின்றனர். இதே போல், ஏசுவும் ஆடு மேய்க்கும் மந்தையில் பிறந்தவரே, முகம்மது நபியும் ஆடு மேய்த்தவர் தான். இவர்களை பின்பற்றும் நாம் பிறரை குறைவாய் பார்க்க வைப்பது எது? கடவுளா ? ஒரு பறவைக்கு ஈம சடங்குகள் செய்தவன் தெய்வம் - மனிதனை மதியாது இருப்பவன் ஈனத்தின் வடிவம்.

பிறகு வேற என்ன இருக்க முடியும்?
அதை அவர்கள் தான் சொல்ல வேண்டும். இந்த உலகம் சார்ந்திருத்தல் தத்துவம் கொண்டது. தனக்கு தேவையான பொருட்கள் கூட பிறர் செய்து கொடுக்க, பிழையாய் பிரிவினை செய்வது எதற்காக? அதில் ஜாதி பார்க்காது குருடராய் மாறுவது ஏனோ?

Friday, July 31, 2009



என் சிகாகோ பயணம்

சந்தியா காலம்...

நாள் முழுதும் நடந்த களைப்பில்
ஓய்வு எடுக்க ஓர் மலையில் ஒதுங்கும்
சூரியன்...

நாளை என் நண்பர்களோடு நான்
கொண்டாடவிருக்கும் நண்பர்கள் தினம்...

அணு அணுவாய் நான் ரசித்த நாட்கள்
ஆல மரமாய் விரிகிறது சிறிய இமைகளின்
இடையே!

அந்நிய தேச பயணம்...
யாதும் ஊரே, யாவரும் கேளிர்,
என் தமிழ் சொன்னது
நினைவிற்கு வந்தது..

கூட்டை தாண்டி பறக்க ஆயத்தம்மானேன்
கேள்வி சிறகுகளை தாங்கி கொண்டு...

இறந்தக்காலமும் எதிர்க்காலமும்
நிகழ்க்காலத்திடம் தங்கள் எண்ணங்களை
பதிவு செய்து கொண்டிருந்தன!

அடுத்த கண ரகசியங்கள் முன்னமே
அறிவிக்கபடுவதில்லை..
அறிந்து கொண்டால்
ஆனந்தம் இல்லை!

சம்பாதிக்க போகும் சம்பத்தை பற்றிய
கல்பனா சக்தியில் மிதந்த
கால்கள் சிகாகோ மண்ணில்
பதிந்தது!

காண்பவை யாவிலும்
லக்ஷ்மி கடாக்ஷம் - ஊடே
திட்டு திட்டுக்களாய்
படிந்திருக்கும்
வறுமை கறை!

முதல் நாள் பள்ளி செல்லும்
மழலையாய் நான்..

மெல்ல மெல்ல தளர்ந்தது
என்னை சுற்றிய இறுக்கம்
சுற்றி இருந்த தோழமையால்..

இனிப்பின் இருப்பிடம் சேரும் எறும்பாய்
ஒருவர் மற்றொருவரை அடைந்தோம்!

பகலில் தனித்திருக்கும் நதிகளை
அந்தியில் சேர்த்திடும் குளம்பி கால்வாய்!

பாட்டி வீட்டிற்க்கு பிறகு மறுபடியும்
வாய்த்த நிலாச்சோறு இரவுகள்!

நாட்கள் நகர நகர,
நவீன நகரத்தில் நண்பர்கள் நாங்கள்
நசுக்கபட்டோம் நட்பு புள்ளியில்...

சந்தோஷ நாதம் மீட்டிய
இசை சிரிப்புகள்!
உறவின் ஆயுள் நீட்டிய
நீண்ட பயணங்கள் !
பொறுமையின் எல்லையை
சோதித்த திரைப்படங்கள்!

பணியின் சுமையை பனியில்
இறக்கி வைத்து கூட்டாக
சூதாடுவோம்...
ஜெயம் அபஜயமும்
மாறி மாறி சாமரம்
வீச அங்கேயே உறங்கி
போவோம்!

காலதேவியின் கட்டளைப்படி
பறவைகள் சில வீடு திரும்ப
சில இடம் பெயர்ந்தது !

முருக வேலுண்டு வினையில்லை
மின் அஞ்சலுண்டு எங்களுக்குள்
பிரிவில்லை!

பிரியா விடை என்று எதுவுமில்லை - ஆழமான நட்பில்
பிரிவு என்ற வினாவே எழுவதில்லை..

சட்டென்று அடித்த அழைப்பு மணியால்
கனவை கை கழுவினேன்...

பிடித்த புத்தகம் மீண்டும்
படித்த திருப்தியுடன்
கீழே இறங்கி வர..
அங்கே வாசலில்
நாளை நண்பர்களுக்கு கொடுக்க
கை நிறைய பரிசும்
மனம் வழிய நட்போடு
சாரதாவும் முக்ஹர்ஜியும்....

அவர்கள் இருவரும்
ஒரே குரலில்,
"Deiiiiiiiiiiiii VP" என அலற
மறுபடியும் தொடங்கியது என்
சிகாகோ பயணம்!


Tuesday, July 28, 2009



என் முதல் ரசிகைக்கு...


மழையின் சத்தமான இரைச்சல்களில்
என் இதயத்தின் அழுகைகள் ஊமையாகி போகின்றன

பெயரிட முடியாத சிறிய உதவிகள்
உருவாக்கிய நம் உறவு மாளிகையின்
முற்றத்தில் அமர்ந்து
உரையாடி கொண்டிருந்தோம்!

நீ மறவாதிருக்க என் மூளையில்
உன் நிகழ்வுகளை பதிவு செய்து வைத்தாய்..
பதிலுக்கு என்னை உன் இதயத்தில்!

நம் பேச்சு கேட்ட
தொலைபேசியின் கம்பியில்
ஒன்று,
பொறாமை தீயில் அறுந்து போனது
தெரிந்து அலைபேசிக்கு மாறினோம்
நினைவிருக்கிறதா?

ஒரே பாதையின் வேறு திசைகளில்
பயணிக்க தொடங்கும் வேளையில்
என் செவியின் மடல்களில் இதழ் பதித்து
அழுத்தி சொன்னாய்,
"i miss u dear"

காலத்தின் காதல் மயக்கத்தில்
களவாட கொடுத்தாய் நம் அனுதின
சுவாரசியங்களை...

மீட்டு எடுக்க நான் செய்த
முயற்சிக்கு தவறான திருநாமமிட்டு
தெருவோர புழுதிகளோடு
துரத்தினாய்

தடித்து போன வார்த்தை தணலில்
வெந்து தணிந்து விழுந்தது நம்
இதயம் இணைத்த பாலம்

இரண்டு வருடங்கள் இழைத்த தறியை
இரண்டொரு நிமிடத்தில் கிழித்து விட்டேன்!

உறவின் நண்பன் - அன்பு...
எதிரி - அளவு மீறிய அன்பு...

கைப்பிடி அற்ற கத்தி கிழித்த கரமாய்
எல்லை தாண்டிய என் அன்பு பதம் பார்த்த
உன் ஈர நெஞ்சம்...

உன் பேச்சு திறக்காத பொழுதுகள்
உயிர்க்கு வலியை அறிமுகம் செய்து
வைக்கிறது!

சற்று முன் பொறை ஏறும் போதும் அன்று
என் கேசம் நீவி விட்ட உன் ஸ்பரிசம்
சில மணித்துளிகள் என் முன்
வந்து போனது.

இப்போதெல்லாம் உன் தாலாட்டு மறந்து
நான் கண் வளர்கின்றேன்.
என் பூபாளமின்றி நீ
கண் திறக்கின்றாய்.

மேகநீர் கன்னம் நனைக்க மறந்தாலும்
கோபம் கொள்ளுவதில்லை பூமி!

உண்மையான உறவு எதிர்பார்ப்புக்கு
இட ஒதுக்கீடு கொடுப்பதில்லை,
கொடுத்தபின் அது
உறவே இல்லை - அங்கு
உறவே இல்லை!

நீ முன்பு எனக்காக கொடுத்த
வாழ்த்து அட்டைகள்
மெளனமாக இதைதான்
சொல்லிக்கொண்டு இருக்கின்றன!

ஏதோ ஒரு தருணத்தில் இதை
படிக்க நேர்ந்தால் - படித்தபின்
உன் காயங்கள் ஒரு வேளை
குறைந்து போனால் - உடனே
என்னை தொடர்பு கொண்டு சொல்லுவாயா,
"HI DA" ?

Sunday, June 21, 2009




நம்பிக்கை

சரியான வார்த்தை தேடி
சலித்து போன கவிஞனாய்
என் வாழ்வு!

வேர்வையில் விளைத்த விருட்சங்கள்
வெறுங்கை நிரப்பக்கூட விறகு
தரவில்லை!

காலம் செலவாக்கி
காத்திருந்தும் கடைசியாய்
வரவேற்றது என்னவோ
வெற்றியின் எதிர்ப்பதம்
தான்!


விரக்கதியின் விமான கூரையில்
வானம் கூட மறைந்து போனது
நாம் மனிதர்கள் என்றே
மறந்து போனது!!

அவமான அனலில்
சுடப்பட்ட என்
தன்மானம்!

பலவழியில் பயணம்
செய்தும் தொடங்கிய
இடத்திலே மீண்டும்
நான்!

கடற்கரை சென்றேன் - உப்புநீரால்
காயத்துக்கு ஒத்தடம்
கொடுக்க

இடறியது ஏதோ ஒன்று
எடுத்துப்பார்க்கையில்,
எனக்கென்றே எழுதப்பட்ட
இயற்கையின் கவிதையொன்று!

மனம் வாசித்த வரிகள் - இதோ
தங்களின் பார்வைக்கு

நம்பிக்கை சூரியனை சுற்றியே
வரையப்படும் வாழ்க்கையின்
வட்டப்பாதை...

ஏமாற்ற முன்னுரை இல்லா
இன்ப புத்தகங்கள்
எதுவுமில்லை!

கனவின் கைகள் தான்
நாகரிக உலகின்
கதவை திறந்திருக்கிறது

தவறும் முயற்சியும்
பெற்ற மழலைகள்
நிரம்பிய குடிலே
நம் கிரகம்!

உள்ளங்களின் கலவி
மொழிகளின் ஜனனம்!

இருட்டில் தவிக்கும் இரவிற்கு
துணையாய் மின்சார விளக்கு!

இறைப் பணியின் இரகசியம்
சொல்லும் மனித
மருத்துவம்!

காசி புலவர் பேசும் உரையை
காஞ்சியில் கேட்க விழைந்த
பாரதியின் படைப்புகள்
தாங்கிய காகிதம்!

கால் நடைக்கு ஓய்வு
கொடுத்த வாகனங்களின்
வரவு!

ஆதியும் அந்தமும்
அளவிட துடிக்கும்
அஞ்ஞானத்தின் விஞ்ஞானம்!

தூரமும் நேரமும்
பாதிப்பதில்லை தொலைபேசியின்
தொடர்புகளை..


இப்படியாக,
வெள்ளை பலகையில்
வானவில் தீட்டிய பல
இலட்சிய வண்ணங்கள்!

நாம் பாதம் பதிக்கும்
நானிலமும் நின்றே இருக்கிறது
வான்வெளியில்!

நாளையும் ஞாயிறு வரும் என்றே
நம்பிக்கையில் உறங்க செல்கிறது
பூக்கள்!

முகவிழி இழப்பினும்
முன்னோக்கி நகரும்
நகங்களின் கால்கள்!

முடிவின் முடிவை
மாற்றிகொண்டே இருக்கும்
தொடக்கங்கள்!!

வெற்றியின் வரவேற்பறைக்கு
தோல்விகளே வாசற்படிகள்

சரிந்து இருக்கும் நிழலின்
உருவம் மட்டுமே நிமிர்ந்து
நிற்க முடியும்!

தடை போடும் கற்களில்
தாளம் போடும் நதியாய் - நாம்
மாறிட வேண்டும்

துயிலும் நேரமும்
துடித்தே இருக்கட்டும்
நம்பிக்கையின்
இதய துடிப்புகள்!


உளிகள் கொடுக்கும் வலிகள்
உண்மையில் கடவுளை
காணத்தான்!


உற்றுநோக்கு,
முற்றுப்புள்ளியும் காற்ப்புள்ளியாகும்
இடமிருந்தால்!!


உழைப்பின் வெளிச்சத்தை
அணையாது காத்த
கருணை கடலுக்கு
நன்றி சொல்ல மேலே பார்த்தேன் - அங்கே
தன் முகம் மறைக்கும்
முகில்திரையை
கிழித்து கொண்டிருந்தது
வானம்!!


Thursday, February 05, 2009

தொலைந்த நட்பு

உன் அறிமுகம் கிடைக்காது போயிருந்தால்
பிடித்தமான ஏதோ ஒன்றை
கண்டிப்பாய் இழந்திருப்பேன்!

உனக்காக கவிதை எழுத
என் கைகள்
காகிதம் தொடும் முன்
எண்ணங்கள் முன்னமே
அமர்ந்து கொள்கிறது!

பல பெண்களுக்கு மத்தியில் தன் தாய்
அறியும் பிள்ளையாய் என் தோழியாய்
உன்னை அறிந்தேன்...

கண்டதும் காதல் நேருமோ
தெரியாது ஆனால்
நட்பு சாத்தியம் - அதற்கு
நாமே உதாரணம்!

நட்பு கோப்பை வழிய
தேநீர் பேச்சுக்கள்

நான் நீ பேதம் கலைத்த
நீண்ட உரையாடல்கள்

இசையும் தமிழும்
இணைத்த பொழுதுகள்

மனம் பேச
உதடுகள் உறங்கிய
இரவுகள்!

இப்படி நான் சொல்ல
இன்னும் எத்தனை எத்தனை
சந்தர்பங்கள்?

ஒரு இதயம் இரண்டு
உயிர் தாங்குமோ?
உன் உறவு கொடுத்த
கேள்வி இது

என்றும் இருந்திடும் நம் நட்பு
என்ற எண்ணத்தில் விழந்தது
எரிதழல்

பிழை செய்தேனே
உன்னை பிரிந்து போக
காரணமாகி...
என் நெஞ்சம்
ரணமாகி...

விழிகளும் வார்த்தைகளும் மறுக்கப்பட்ட
நம் உறவுக்கு இனி இதயங்களே
சிறைச்சாலை!

எழுதி எழுதி அழிக்கும்
கவிதை போல
வந்து வந்து போகும்
உன் நினைவுகள்...
அதற்கு
இடம் கொடுத்து
தள்ளி படுக்கும்
இமைகள்!

கைகோர்க்கும்
விரல் எங்கே?
என் தமிழ் சுவைக்கும்
உன்னிதழ்கள் எங்கே?
நட்பு பேசும் உன்
கண்கள் எங்கே?
என் கோபம் தணிக்கும்
உன் சொற்கள் எங்கே?

உள்ளம் தவிர்த்து நீ பேசும்
உன் இன்னொரு ஜீவன்
இங்கே ஏங்கி தவிக்கையில்
உடனிருந்து மறைந்து இருக்கும் உயிராய்
நீ இருப்பது எங்கே?

இனி
நீயல்லா பயணங்கள்
தொலைபேசி அழைப்புகள்
காரணமில்லா கோபங்கள்
மணிக்கொரு முறை
உன் முக தரிசனம்
எதுவும் இல்லாத
ஊனமான வாழ்க்கையாய்
மாறக்கூடும்!

தள்ளி இருக்கையில்
சேர்ந்து இருந்த தோழி
அருகில் இருக்கையில்
தொலைவாகி போனாயே
பின்பு
தொலைந்தும் போனாயே!

பிழை காம்பு தாங்கும்
என் கவிதை மலர்
முகர இல்லாது
போனாயே
என்னை ஏமாற்றி
சென்றாயே!

நான் கவி கிறுக்க
காரணமானவளே
இன்று கவிஞனாய்
நானிருக்க காணாது
போனாயே!

மறுபிறப்பு என்பது நிஜமென்றால்
இம்முறை பிரிவு
தோற்று போக,
மாறாத நம்
உள்ளமும் முகமும்
கொண்ட அதே
உறவு வேண்டும்!

இருள் தேடும் விடியலாய்
எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்
உன்னை வரவேற்க
கையில் ஒரு
பூங்கொத்தோடு!!!