Saturday, January 05, 2013

ஷீரடியில் ஒரு நாள்! 

அன்றைய வெளிச்சம் வாங்க 
கோமகன் வாசலில் 
கண்கள் சிவக்க
ஆதவன் காத்திருக்க..  

கரு மணிகள் இரண்டும் 
இமைக்கதவின் 
தாழ்ப்பாளை திறக்கும்..
கவிதை நயனங்கள்
காலைப் பூக்களாய் விரியும்!

உடைந்த மசூதி உறைவிடம் - உள்ளே 
விடாது எரியும் விறகுகள்...
சாக்கால் செய்த படுக்கை - தலை
சாய்க்க தோதாய் தலையணை ...
தோளை தொடும் தலைப்பாகை 

தோய்க்க மறந்திருக்கும் ...

அழுக்கை அணிந்திருக்கும் கஃபினி 
அதுவும் அங்கங்கே கிழிந்திருக்கும்! 

தரித்தரனாய் தோன்றும் தோற்றம் - இவனை 
தரிசிக்கவே  தெரியும் இறையின்
இன்னொரு தோற்றம்!


பானை நீரை பாய்ச்ச வரும் 
பொழுதை நோக்கி 
மடல் மேனியில்  
வேர்வை துளிகளோடு
தாகத்தில் பூக்கள்!  

காய்ச்சிடாத மண்பாண்டம் 
இரண்டு
கடன் வாங்கி 
கருணையும் நீரையும் பரிமாற
வயிறு நிறையும் வேர்களுக்கு!



பிரபஞ்சமாய் விரிந்திருக்கும் 
பழுத்த ஆலமரத்தில் 
இளைப்பாறும் பறவைகள் - தன்
இல்லத்தில் பிச்சை 
ஏந்தும்  
பெம்மானுக்கு உணவிட
இறந்து போகும் 
முன் ஜென்ம 
பாவங்கள்!


பேசா பறவைக்கும்
பேசும் உயிர்க்கும் 
பகிர்ந்த பின் பசியாறுகிறான்
புவி காக்கும்
பரமன்!
புவிக்கு ஆக்கும்
பரமன்!


குழந்தை குறும்பும்

அன்னை கோபமும்

அன்பின் முள்ளை 
நேர்க்கோட்டில் நிறுத்தும் 
தராசு தட்டுகள்  !

கொழித்த செல்வமும் 
கெளபீனத்தை வணங்கும்... 
மெத்த படித்த அறிவும் 
மௌனத்தை மட்டும் பேசியிருக்கும்...
அதிசயங்களும் அரங்கேறும்
அவன் தர்பாரில்!


மக்களோடு மக்களாய் வாழ்ந்தும்   

மாயை மழையில் நனையா நெருப்பு...

கசக்கும் வேம்பின் அடியில் 
காலை மடக்கி 
அமர்ந்திருந்த கரும்பு! 

மாலை மஞ்சள் மலர்களால்
தொடுத்த மாலையை 
இரவு எடுத்துவர 
எண்ணெய் விளக்குகள் 
ஏற்றிய 
துவாரகமாயி எழிலில் 
காணாது போகும் 
மதியின் வதனம்!

தேனை கூடும் 
தேனீக்களின் ரீங்காரத்தில் 
தலைவனும் தன்னை 
மறக்கிறான்!
சலங்கைகள் கட்டி 
சத்தமாய் ஆடி 
பாடுகிறான்! 

பாதங்களின் ரேகைகளாய் 
பக்தர்களில் சிலர் 
தங்கிவிட... 
பாதம் சேவித்து
ஏனையோர் புறப்பட...
உதி பிரசாதமளித்து 
வாசலுக்கு வந்து 
வழியனுப்பும் காட்சி
வெளிப்படுத்தும் அவன் 
உள்ளத்தின் நீட்சி! 

உடலோ, உள்ளமோ
ஊனப்பட, 
உதவியென
தேடும் தலைவனை..

தொலைவோ, தொடும் தூரமோ
தொடர்புக்கொள்ள தடையில்லை.. 

நம்பிக்கையோடு நெஞ்சத்தில் 
நினைத்தாலே
நீர்த்துப் போகும் பிரச்சனைகள் 
நிறைவேறும் நியாயமான பிராத்தனைகள்! 

வினாக்களுக்கு விடையாகி 
விடையில்லா வினாவுமாகி 
வானமாய் வளர்ந்திருக்கும் 
கொற்றவனைக் கொண்ட 
ஷிர்டி கொடுத்த வைத்த
ஊரடி!  

Poem on Narasima swami


குருவென்னும் முதல்
வரி தேடிய கவியே - உம்
கவிதையாய் கனியவே
காத்திருந்தது அக்கருணையே!

இருள் மேகச்சிறையில்
இன்னல்பட்ட 
இறவா வானம்
வளியின் வருகையில் 
விடுதலையாக...
நன்றி சொல்லும்
நானிலமாய்
நாங்களும் சொல்லுவோம்
நாளெல்லாம்!

கல்லில் கடவுளை
காணும் சிற்பியின்
உளி - மலர்
சாத்திய சமாதியில்
புலர்ந்தது கிழக்கின்
ஒளி! 


காலைச் சுற்றிய
கர்மவினையெல்லாம்
காலாற நடந்தே
கடந்தாய்!
தொடர்ந்த தொல்லையை
தொலைக்கவே
அவரைப் 
பற்றித் தொழுதாய்!
அவரைப் பற்றி
தொகுத்தாய்!

சீரடி சுமந்த    மாமணி 
மயிலையின் மடியில்
தவழ்ந்திட...
மண்வாசம் பரப்பும்
மழையாய் மனம்!

பாபாவின்  வாழக்கை வீணையை 
விரல் ஐந்தும்
வாசிக்க 
விளங்கியது 
புனிதனின் சிறப்பு 
விளைந்தது 
பக்தியில் மதிப்பு

சங்கம் வளர்த்த  இயல் இசை நாடகம்
சாயை வளர்க்க
இசைய
தான் நுகர்ந்த 
நறுமணம்  நாடெல்லாம் 
பரவ..
என்ன தவம் செய்தனை 
இவரை நாம் பெற?

புள்ளிகள் புள்ளினங்களாய்
பொலிவு பெற
புவியெல்லாம் 
வலம் வர 
புத்துயிர் பெற்றது 
பக்கிரியின் புகழ்!

மண்ணை மனிதனாக்கிய 
மூர்த்தியின் கீர்த்தியை
மண் திங்காது
காத்து 
வான் புகழ்
கொண்டாய்!

அடைந்த மெய்பொருளை 
அகிலத்தோடு பகிர்ந்து
அருளிய உங்களை
காணாது போனோமே
நாங்கள்? 
அது சரி,
உள்ளே வசிக்கும் 
உயிரை காணாவிடின் 
கவலைக் கொள்ளுமோ
உடலின் விழிகள்?

கண்பொத்தி விளையாட்டு



அறிந்த வார்த்தைகள் அனைத்திலும் 
அர்ச்சித்த பின்னும் அலைபாய்ந்திருக்கும் 
மனம் அறியாது 
மௌனத்தை வெல்லும் 
மொழிகள் முளைக்கவில்லை 
என்பதை


தரையிலிருந்த கல் நான் - அவன் 
தலையிலிருக்கும் கிரீடத்தில் குடிபெயர்ந்தும் 
நிறைவுக்கொள்ளாது தவித்திருந்தேன்
தாகத்துடன் கானல் நீருக்கு.


தன்னையறிந்த தலைவன் - என்
எண்ணம் அறிந்தான் - என்னுள் 
ஞானம் விதைக்க - என்னை 
விந்தில் விதைத்தான் 
நரனாய் நானும் வந்தேன்  
நான் யார் என்பதே 
மறந்தேன்!


நீண்டிருக்கும் வாழக்கைக் கடலில் 
நீரோடையொன்று தமிழ்த் துடுப்பால் 
நீந்தவே 
கைக்கொடுத்தாய் கலங்கரை
விளக்ககாவே...

திசையில்லா தூசியாய் தானிருந்தேன் 
தருவின் திருவடி தொட தனியொரு 
திசை தோன்றிட கண்டேன்

வெண்சாமரம் வீசியவனின் வாழக்கை 

வெற்றிடத்தில் விளைந்தன புகழின் 
வெடிப்புகள் 

ஒன்றுமில்லா பாத்திரத்தில்
ஒரு துளி நெய்யை ஊற்றினாய்  
பொங்கி வந்த 
புகழின் வெள்ளம்
கண்களை மறைக்க
கடவுளை மறந்தேன் 

ஆசைப் பாறையில் என்
அறிவை சாணை பிடித்தேன்
மழுங்கிய முனையே 
மகிழ்ச்சியென்று 
முரசு கொட்டினேன் 


மனம் சேர்த்த குப்பைகள்
மக்க தொடங்கியது - என்
முதுகெலும்பும் பாரம் தாங்காது
முனகியது..


துன்பத்தின் இலையில் பரிமாறும்
அன்னமே இன்பம் 
என் தெளிந்தேன்..

உணர்ச்சி குவியலுக்குள் புதைந்திருக்கும் 
உள்ளம் உதவியென உன்னை அழைக்கிறது 


யோசித்து பார்த்தால்..
என் நாட்குறிப்புகளை நான் 
பிழையின்றி எழுதியதில்லை - உன்னருள் 
திருத்தாமல் இருந்ததில்லை 

சேமித்த கர்ம விறகுகளை - உன்
சன்னிதானத்தில் சேர்த்தேன் 
துனிக்கு உரமாக - பதிலுக்கு
உதி அளித்தாய் வாழ்வின் 
உரமாக... 

மறுபிறப்பறுக்கும் மன்னவனின் பிறப்பறியோம்
மண்ணுக்கும் வேண்டுமோ 
மலையருவியின் மூலம்?

உடல்கொண்டு நீ வரவேண்டாம்...


உன் நிழற்படம் மட்டும் போதும் - என்
நிழலும் நெகிழ்ந்து நீர் சுரக்கும் 

இடர் வந்த போதும்
இடறி விழுந்த போதும் - என்னை
ஏந்திக் கொண்ட இறைவனே..
இனி  
உன் மடியே 
என் உறைவிடம்