Sunday, February 28, 2010

மரணம் இல்லா ஜனனம்!

முன்னுரை:
எப்பொழுதும் என்னுடைய கவிதை இடம்பெறும் என் வலைப்பூவில், மாறுதலாய் முதல் முறையாய் என் தோழியின் கவிதை.

வயது என்னும் ஒரு விஷயம் உறவுக்கு கிடையாது, உறவில் இருப்பவர்களுக்கு மட்டுமே உண்டு. அந்த வகையில், நட்பு எங்கள் இருவரை தேர்ந்தெடுத்தது. இணையம் அதற்கு ஒரு கருவி. என் தோழிக்கு கவிதை மீதும் அளவுக் கடந்த காதல். எங்கள் நட்பை இதில் அழகுப்படுத்தி பார்த்து உள்ளார்கள்.

சுய விளம்பரத்திற்காக இதை இங்கே பதிவு செய்யவில்லை. என் குரு திரு சுஜாதா சொன்னது போல், இணையத்தில் ஒன்று இடம்பெறும் போது அது சாசுவதமாகிறது. சாசுவதமான நட்புக்கு செய்யும் பிரதி உபகாரமாகவே இதை நான் கருதுகிறேன்.
இறுதியாய் ஒரு முறை, "Thank you So Much" mam!!!

இனி அவர்களின் படைப்பு உங்கள் பார்வைக்கு....
--------------

கவிதைக் காகிதத்தை
நேசித்த எனக்கு
கணிணியின் நுட்பத்தை
நுகர தெரியவில்லை!
கணிணியை திறந்தால்
உலகம் காணலாம்
கற்றோர் அனைவரின்
ஏகோபித்த கருத்து
கணிணிகள் அனைத்தும்
யசோதா கிருஷ்ணனோ?
இணையத்தளத்தில்
இறைமை இருக்குமோ?

ஆர்வம் சிறிதாய்
அகத்தில் பூக்க
ஆர்க்கூட்டில் நானுமோர்
அங்கமானேன்
விழிகள் தேடின
எதைத் தேடுகிறோம்
என தெரியாமலே
வியப்போ வியப்பு!
வேண்டாமலே கிடைத்தது
வேண்டியது
கண்களை ஈர்த்தன
கனித்தமிழ் சொற்கள்!

'உலகம் யாவும் நானே!'
ஒ! உன் 'நானே!'
'நான்' ஒலிக்கவில்லை
'நாம்' உணர்த்தியது
மூளையின் உத்தரவிற்கு
காத்திராமல்
என் விரல்கள் தானே
க்ளிக் செய்தது
விரிந்தது உன் வியனுலகம்!

முகமோ, நிறமோ
ஈர்க்கவில்லை எனை!
நாடு பார்த்தேன் - இந்தியா
அமெரிக்காவில் நீ இருந்தாலும்
தெருக்கோடியில்
உணர்ந்தேன் உன்னை,
ஊர் பார்த்தேன் - சென்னை
அட! என் ஜன்னல் திறந்தேன்
எதிர் வீட்டில் நீ!
உன் ஆர்வம் படித்தேன் - தமிழ்
ஹை! என் வீட்டுத் திண்ணையில் நீ!
உனக்கு பிடித்த எழுத்தாளர் பார்த்தேன்
ஆஹா! அந்த நிமிடம் முதல்
என் இதயத்தில் நீ!
சிறய அறிமுகத்துடன் யாசித்தேன்
உன் உன்னத நட்பை...
யோசிக்காமல் நீட்டினாய்
உன் சிநேதிதக் கரத்தை....
தொடாமலே Scrap ல் உன்
ஸ்பரிசம் உணர்ந்தேன்!

மாதம் ஒருமுறை சின்ன 'ஹாய்'
பருவத்திற்கொருமுறை நலம் விசாரிப்பு
விடுபட்டுப் போனதா நட்பு?
இல்லை! விடுமுறையில் போனது!

பள்ளி திறந்தும் வகுப்பிற்கு
வரும் சிறுவன்போல் சிகாகோவிலிருந்து
சென்னை வந்தாய்!
ஜனித்திருந்தாள் என்னுள் ஜனனி
பரிதவித்தது மனம்.
எதற்காக?
என் படைப்பின் முதல் சுவாசத்தை
உன் விழிகள் வாசிக்க
இதயம் நேசிக்க!

ஆபத்து வரும்போது மட்டுமே
ஆண்டவனைத் தேடும் பக்தைபோல்
அவசரமாய் ஆர்க்கூட்டில்
தேடினேன் உன்னை
இன்ஸ்டன்ட் கடவுளாய்
பிரசன்னமானாய் நீ!
நாலைந்து scrap ல்
நம்பர் வாங்கினேன்
முதல் அழைப்பிலே
மூன்றாண்டு தோழமை!
தகவல் பரிமாற்றத்தில்
பிரயாணம் செய்தன
இசையும், இலக்கியமும்!

அறிவாலயத்தில் நேர்முக அறிமுகம்
சிவப்பு சட்டையில் வெள்ளை சிரிப்புடன்
தொட்டுக் கைக்குலுக்கினாய்
உணரவில்லை ஸ்பரிசம்
அது தான் நட்பின் ரகசியம்
மேடையில் பேசியது
ஏழு வருட ஆத்ம நட்பு!
பக்கத்தில் கரமுயர்த்தி ஆர்ப்பரித்தது
ஏழு மாத அறிமுக நட்பு!
அன்று என் அகம்
அதிகம் ரசித்தது
அறிமுக நட்பை!

விடைபெற்று சென்றாய் பைக்கில்
ஆட்டோவில் அருகில் உணர்ந்தேன் உன்னை
அதன்பின் ஒவ்வொரு நாளும்
வடகிழக்கு பருவக்காற்று
வீசியது நம்
நட்புச் சோலையில்!

குறிஞ்சிப் பூக்கள் தினம் தினம்
பூக்கும் அதிசயம் நடந்தது!
என் படைப்பு தொடர்ந்தது
நீ என் நண்பன் - அது மகிழ்ச்சி!
ஜனனியின் ரசிகன் - அது
இரட்டிப்பு மகிழ்ச்சி!
"இனிது! இனிது!" இனிதாய் முடிய
ஓர் உந்து சக்தி நீ!

கடந்த மாதம் உன் blog ல்
கவிதைகளுடன்
கைகோர்த்து நடந்தேன்!

உன் 'சிகாகோ பயணம்'
அதில் அந்நிய தேசத்தை
அளவளாமல்
மனிதநேயம் பகர்ந்தாய்
நட்புலகை வியந்தாய்
அயல்நாட்டில் அன்புத் தமிழாய்
உலா சென்றாய்
அதுவே தமிழின் பெருமிதம்!

'தொலைந்த போன நட்பில்'
நீ தொலையாமல் கிடைத்தாய்
தொலைந்த நட்பில் - உன்
முகவரியை காட்டினாய்!
காணாமல் போனவர்களை
தொலைக்காட்சி மூலம் தேடுவார்கள்
நீயோ, உன் கவிதையில்
தேடுகிறாய்!
கொடுத்து வைத்தவர் யார்?
உன் தோழியா? நீயா?
இருவரையும் ரசிக்கும் நானே!

'மார்க்கெட் பாட்டி'
உண்மையை மெச்சி
உழைப்பை உச்சி முகர்ந்து
உன்னையே உயர்த்தி விட்டாய்!
பாட்டியை தரிசித்த உனக்கு
புத்தகம் வாசித்த நிறைவு!
எனக்கோ, அகராதி புரட்டிய உணர்வு!
மார்க்கெட் பாட்டியிடம் சொல்
உன் கவிதையின் கதாநாயகி யானதால்
அவள் மார்க்கெட் உயர்ந்து விட்டதென்று!

"போய் வா தோழி!"
எங்கு போனாள்?
நிரந்தரமாய்த் தங்கிவிட்டாள்
உன்னிலும், உன் எழுத்திலும்
அவளைக் கேட்டால் சொல்லுவாள்
அவள் எழுதாத கவிதையில்
நிரந்தரம் நீயடா! என்று

"சராசரி"
இல்லைகளை அடுக்கி
இருப்பவைகளை நிரப்பிய
அதிசயக் கவி நீ!

ஆர்ப்பரிக்கும் அலைகடலல்ல நீ!
சங்கீதமாய் சலசலக்கும்
சிற்றோடை!
வேகமாய் கருத்துரைக்கும்
புயலல்ல நீ!
விவேகமாய் தவழ்ந்து வரும்
தமிழ் தென்றல்!
பிரமிக்க வைக்கும்
பெருமலை அல்ல நீ!
அண்ணாந்து பார்க்க வைக்கும்
சிறு குன்று!
என் வீட்டுத் தொட்டியில்
நான் வளர்த்த வீட்டுப் பூ அல்ல நீ!
பிரபஞ்சத்தை ரசிக்க வைக்கும்
கணிணியில் நான் கண்டெடுத்த
நட்புப் பூ!

என் படைப்பு உனக்கு பிடிக்கும்
என் செல்ல படைப்பிற்கோ
உன்னை பிடிக்கும்!
எவ்வளவு?
உலகை விட, உயிரை விட!
உடன் பிறவாமலே
சகோதர பாசத்தில்
விளையாடுகிறீர்கள்
நீயா? நானா?

யார் ஜெயித்தாலும்
அடித்துக்கொள்கிறீர்கள் HiFi
கைபேசியில் பேசினாலோ பேரிடி
குறுந்தகவலிலோ குற்றால அருவி
உங்கள் பாசமழைச் சாரல்
சில சமயம் என் முகத்தில்
சிறிதாய் அடித்தால்
சிலிர்த்து போகிறேன் நான்!

நட்பினால் நமக்குள் ஒரு பரிமாற்றம்
நீ 27 year old,
நான் 41 year young
இது எப்படி?
என் எழுத்தில் நம் நட்பின் ஜனனம்!
அதனால் அது வென்றது மரணம்


Sunday, February 07, 2010

சராசரி

சிகரத்தின் இல்லறவாசிகள்
சராசரிகளின் சுகம்
அனுபவிப்பதில்லை...

ஆர்ப்பாட்டம் கிறுக்காத
வாழக்கைப் பக்கங்கள்!

சாலையில் நடக்கும் போது
சகலமும் குசலம் விசாரிக்கும்
சங்கடமில்லை!

உறக்கத்திலும் பாசாங்கு
கனவை நிரப்ப வேண்டியதில்லை!

உப்பு குறைந்ததால் உஷ்ணப்பட்ட
உப்பு சப்பில்லாத சண்டைகள்
உலகோடு பகிர்ந்து கொள்ள
தேவையில்லை!

மனைவியின் செல்லப் பெயரை
மற்றவர்க்கு மார்தட்டி சொல்லும்
வாய்ப்பு கிடைப்பதில்லை!

தினசரி வாழ்வைத் தினம்
ஒரு பத்திரிகை உணவாக்கிடும்
அவலமில்லை!

அந்நிய சொந்தங்களின் அலைகளில்
சொந்தங்கள் அந்நிய கரையில்
ஒதுங்குவதில்லை!

நம்முடைய நேரங்கள் நேயர்களின்
விருப்பமாய் மாறிட
கூடுவதில்லை!

வெற்றியின் வீரியமும்
தோல்வியின் ஆழமும்
பூதக்கண்ணாடியில் சிக்குவதில்லை!

எதிர் வீட்டைப் பற்றிய
நம் பேச்சுக்கு எவரோருவர்
விமர்சனம் எழுதவதில்லை!

கவன கழுகுகளைக் கைத்தட்டி
அழைக்கும் மனித
பாம்புகளே!
புகழ் மகுடியின் இசையில்
செவிகளற்ற நீங்கள்
மயங்குவதேன்?

பெருமைக்காக உயரமிருக்க
தவமிருக்கும் ஒற்றைக்கால்
முடவர்களே!
இயல்பை எரித்து
பிறர்க்காக சுயம்
வளர்ப்பதோ?

உழைப்பு திரியில் சுடர்விடும்
திறமை தீபங்கள், தானே
காட்டும் அந்த
கர்ப்பக்கிரகத்தை.. .
அதுவரை
அமைதியாய் உங்கள்
ஆர்வங்களை தொழுங்கள்!

பிரபலமான முகங்களைத்
தயாரிக்கும் முகமில்லா
என்னை போல்
சராசரிகளுக்கு இந்த
கவிதைச் சமர்ப்பணம்!