Sunday, February 07, 2010

சராசரி

சிகரத்தின் இல்லறவாசிகள்
சராசரிகளின் சுகம்
அனுபவிப்பதில்லை...

ஆர்ப்பாட்டம் கிறுக்காத
வாழக்கைப் பக்கங்கள்!

சாலையில் நடக்கும் போது
சகலமும் குசலம் விசாரிக்கும்
சங்கடமில்லை!

உறக்கத்திலும் பாசாங்கு
கனவை நிரப்ப வேண்டியதில்லை!

உப்பு குறைந்ததால் உஷ்ணப்பட்ட
உப்பு சப்பில்லாத சண்டைகள்
உலகோடு பகிர்ந்து கொள்ள
தேவையில்லை!

மனைவியின் செல்லப் பெயரை
மற்றவர்க்கு மார்தட்டி சொல்லும்
வாய்ப்பு கிடைப்பதில்லை!

தினசரி வாழ்வைத் தினம்
ஒரு பத்திரிகை உணவாக்கிடும்
அவலமில்லை!

அந்நிய சொந்தங்களின் அலைகளில்
சொந்தங்கள் அந்நிய கரையில்
ஒதுங்குவதில்லை!

நம்முடைய நேரங்கள் நேயர்களின்
விருப்பமாய் மாறிட
கூடுவதில்லை!

வெற்றியின் வீரியமும்
தோல்வியின் ஆழமும்
பூதக்கண்ணாடியில் சிக்குவதில்லை!

எதிர் வீட்டைப் பற்றிய
நம் பேச்சுக்கு எவரோருவர்
விமர்சனம் எழுதவதில்லை!

கவன கழுகுகளைக் கைத்தட்டி
அழைக்கும் மனித
பாம்புகளே!
புகழ் மகுடியின் இசையில்
செவிகளற்ற நீங்கள்
மயங்குவதேன்?

பெருமைக்காக உயரமிருக்க
தவமிருக்கும் ஒற்றைக்கால்
முடவர்களே!
இயல்பை எரித்து
பிறர்க்காக சுயம்
வளர்ப்பதோ?

உழைப்பு திரியில் சுடர்விடும்
திறமை தீபங்கள், தானே
காட்டும் அந்த
கர்ப்பக்கிரகத்தை.. .
அதுவரை
அமைதியாய் உங்கள்
ஆர்வங்களை தொழுங்கள்!

பிரபலமான முகங்களைத்
தயாரிக்கும் முகமில்லா
என்னை போல்
சராசரிகளுக்கு இந்த
கவிதைச் சமர்ப்பணம்!

2 comments:

ராஜி said...

கடந்த வாரம் பிரபலம் பற்றி நீங்கள் பேசியது இந்த வார கவிதையாக.....

அடடே அற்புதம்.......

வாழ்த்துக்கள் நண்பா !!!

- ராஜி

ஞானவதி அசோகன் said...

Its so natural. Nowhere it is exaggerated, as it may spoil its impact. Subtle nuances which enhance real joys of middle class people r in array.Thanx from Middle class, happy people. Highly optimistic.