Friday, May 28, 2010

மீண்டு(ம்) நான்...

முதல் முறையாய் ரத்தத்தோடு
தன்னையும் சுத்தப்படுத்தி கொண்டது
இதயம்!

விதைக்கப்பட்டவை அறுவடையாகி
பாரம் நீங்கிய பூமியாய்
மனம்!

மலர்கள் சமைத்த பாதையில்
பத்தியமாகிடும் முட்கள்!
கால்களின் வழியே
வெளியேறும் கடந்த கால
தவறுகள்!

மாறுதலில் மையம்
கொண்டதே மானுடம் - ஆயினும்
மறுதலித்து மறுகி
மடியவே சம்மதம்!

தினம் ஓர் ஆடை கொண்டாலும்
திருப்தி அடையாத வானமாய்
நாம்!

இரவல் வாங்கியே எழுதி
கொண்டிருக்கிறோம் நம்
சொந்த வாழ்க்கையை
இரவலென்று தெரியாமலே..

பிண்டத்தில் தொடங்கி மண்
பிண்டத்தில் முடியும் வரை
செதுக்கவே செலவிடுகிறோம்
பிறர் பார்வைக்காக.

நிழல்களுக்கு வண்ணமிட்டு
நிஜங்களை மறைக்கிறோம்
நீர்குமிழிக்கும் நிரந்தரம்
கற்பிக்கிறோம்!

நிரந்தரமென்று ஏதுமில்லை
நிரந்தரமானவை நேசிக்கப்படுவதுமில்லை!

சுமந்தவை சுகமாயினும்
சுட்டெரிக்கப்பட வேண்டும்
ஒரு நாள்!

ஆசையும் பயமும்
சரிபாதியாய் பங்கீட
தலை அனலிலும்
பாதம் புனலிலும்!

உயிர் மறைந்திருக்கும்
உடல் மறையும் வரை
தெரிவதில்லை,
உண்மைக்கும் உயிர்
ஓரளவுக்கு தான்
என்ற உண்மை!

ஒரு இழவு வீட்டில்
பிறக்கும் தத்துவமெல்லாம்
இரண்டு உள்ளங்களின்
சங்கமத்தில் இறந்துவிட
கண்பொத்தி விளையாட்டாய்
கழிந்து போகும்
கனவு நிரப்பிய
கானல் நாட்கள்!

முன்னுரையின் முகம்
தெரியவில்லை
கடைசி வார்த்தை எதுவோ?
அறியவில்லை
இடைபட்ட பக்கங்களை
நிரப்ப எங்களோடு
சேர்ந்து இன்னும்
எத்தனை பேரோ?
ஏதும் செய்தி இல்லை!

கலங்கிய குட்டையில்
கிறுக்கல்களிட்டே
நீர்த்து போகும் இந்த
நீர் துளிகள்!


Thursday, May 27, 2010

இனியேனும் தொடங்குவோம்



காலம் கொடுத்த இயற்கையே - நீ
காலாவதியாகும் நாள் எந்நாளோ?

முதல் உயிர் கண்ட உன்
மூச்சு நிறுத்தும் எங்கள்
முயற்சி முடியும் நாள்
எந்நாளோ?

ஒன்பது கிரகங்களில்
ஒன்றை மட்டும்
நேசித்தாய்!
இப்பாவிகளை படைத்தும்
இன்னும் எப்படி நீ
ஜீவிக்கிறாய்?

நீ அழுத கண்ணீரை
மழையென்றோம்
அடிக்கடி நீ அழாதிருக்க
மரங்களை மரணத்திற்கு
கொடுத்தோம்!

ஆவியாகும் நீர் மேகமாக மறுக்கிறது
அழும் குழந்தைக்கு தன் கண்ணீரே
குடிநீராகுது!

காட்டை அழித்து நகரமாக்கி
மனிதர்கள் நாங்களே அங்கே
மிருகமானோம்!

மின்சாரம் புணர்ந்தே உன்
மேனியெல்லாம் சூடாகி போனதே!
சூரியனும் வலி தாங்காது
ஓடி ஒளிய இடம் தேடுதே!

நீ சிறு வயதில் கட்டிய
பனிப்பாறைகள்
கார்பன் கடலலையில்
மண் கோபுரமாய்
கலைந்து போனதே!

ஒடிந்து போன முதுகெலும்பில்
கட்டிட மூட்டைகளை கிடத்தினோம்
நீ தாங்காது நெளிந்த போதும்
நிறுத்த மறுத்தோம்!

சுனாமியாய் சீறிப்பார்த்தாய்
சரியாகவில்லை நாங்கள்
இப்பொழதும் வெற்றிலைக்கு
சுண்ணாம்பாய் நீதானே!

இன்னும் எத்தனை நாள்
இயற்கையின் எதிரியாய் நாம்?

இரவை பகலாக்கும்
இம்சைதனை குறைத்திடுவோம்!
சொட்டுநீரை கூட வீணாக்கும் எவரையும்
இ.பி.கோ வில் அடைத்திடுவோம்!

ஆளுக்கொரு மரம்
சொந்தமாய் வைத்திருப்போம்!
அது மரிக்கும் தருணத்தில்
ஆயிரம் மரச்செடி நட்டு
அஞ்சலி செலுத்துவோம்!

அவசியமன்றி
விரையும் வாகனங்களில்
விரையமாகும் எரிபொருளை
தடுத்திடுவோம்!

விதியை மீறுபவர்களுக்கு
நாற்பது நாள்
நடைபயண தண்டனை
விதித்திடுவோம்!

பயன்பட்ட பின்னும்
மறுப்பிறவி எடுக்கும்
பொருட்களை பயன்படுத்த
தவறோம்!

இனியேனும்
தாமதமின்றி தொடங்குவோம்
நம் சந்ததிகள்
தரணியில் வாழ
தரணியை காண!