Friday, May 28, 2010

மீண்டு(ம்) நான்...

முதல் முறையாய் ரத்தத்தோடு
தன்னையும் சுத்தப்படுத்தி கொண்டது
இதயம்!

விதைக்கப்பட்டவை அறுவடையாகி
பாரம் நீங்கிய பூமியாய்
மனம்!

மலர்கள் சமைத்த பாதையில்
பத்தியமாகிடும் முட்கள்!
கால்களின் வழியே
வெளியேறும் கடந்த கால
தவறுகள்!

மாறுதலில் மையம்
கொண்டதே மானுடம் - ஆயினும்
மறுதலித்து மறுகி
மடியவே சம்மதம்!

தினம் ஓர் ஆடை கொண்டாலும்
திருப்தி அடையாத வானமாய்
நாம்!

இரவல் வாங்கியே எழுதி
கொண்டிருக்கிறோம் நம்
சொந்த வாழ்க்கையை
இரவலென்று தெரியாமலே..

பிண்டத்தில் தொடங்கி மண்
பிண்டத்தில் முடியும் வரை
செதுக்கவே செலவிடுகிறோம்
பிறர் பார்வைக்காக.

நிழல்களுக்கு வண்ணமிட்டு
நிஜங்களை மறைக்கிறோம்
நீர்குமிழிக்கும் நிரந்தரம்
கற்பிக்கிறோம்!

நிரந்தரமென்று ஏதுமில்லை
நிரந்தரமானவை நேசிக்கப்படுவதுமில்லை!

சுமந்தவை சுகமாயினும்
சுட்டெரிக்கப்பட வேண்டும்
ஒரு நாள்!

ஆசையும் பயமும்
சரிபாதியாய் பங்கீட
தலை அனலிலும்
பாதம் புனலிலும்!

உயிர் மறைந்திருக்கும்
உடல் மறையும் வரை
தெரிவதில்லை,
உண்மைக்கும் உயிர்
ஓரளவுக்கு தான்
என்ற உண்மை!

ஒரு இழவு வீட்டில்
பிறக்கும் தத்துவமெல்லாம்
இரண்டு உள்ளங்களின்
சங்கமத்தில் இறந்துவிட
கண்பொத்தி விளையாட்டாய்
கழிந்து போகும்
கனவு நிரப்பிய
கானல் நாட்கள்!

முன்னுரையின் முகம்
தெரியவில்லை
கடைசி வார்த்தை எதுவோ?
அறியவில்லை
இடைபட்ட பக்கங்களை
நிரப்ப எங்களோடு
சேர்ந்து இன்னும்
எத்தனை பேரோ?
ஏதும் செய்தி இல்லை!

கலங்கிய குட்டையில்
கிறுக்கல்களிட்டே
நீர்த்து போகும் இந்த
நீர் துளிகள்!


1 comment:

ராஜி said...

கவிதை தலைப்பே ஒரு கவிதை !!! சூப்பரா எழுதி இருக்குறீங்க. வாழ்த்துக்கள் நண்பா !!!