Friday, October 29, 2010

என்னுரை:
முதல் முறையாய் முதலும் முடிவும் இல்லா என் இறைவனைப் பற்றி ஒரு சிறு கவிதை...

காணிக்கை!

சாய்.....

சப்தக்கூண்டில் சிக்காத
சிட்டுக்குருவியை
சிறை வைத்திருக்கும்
நிசப்த வானம்!

இதயம் விரிய
இதழ்கள் குவிய
அலர்ந்திடும் மலர்!

அவன்
நேத்திரங்களின் பனித்துளியில்
நித்தமும் கழுவப்படும்
அடியவர்களின்
சூரிய வினைகள்!

அவன்
அதரம் வழியே
கசிந்திடும் கருணையை
ஏந்திப் பிடிக்கும்
எங்கள் கரங்கள்!

அவன்
கை விரல்
இடையில் தென்படும்
கால் விரல்களே
பாதையாகும்
விழியுள்ள குருடர்களுக்கும் !

மரம் விலகும்
இலையின் அமைதி
அணிந்திருக்கும்
அவன் முகத்தில்
உறங்கியே போகும்
எங்களின்
ஓராயிரம் கவலைகள்!

நம்பிக்கை நூல்
அறுந்துப்போன
மன ஆடையை
மீண்டும் மீண்டும்
தைத்து தருவான்
பொறுமையாய்!

இறைஞ்சுவும் வேண்டுமோ
எங்கள் எம்பிரானை?
வா என்று ஆணையிட்டாலே
வந்து நிற்பான்
சேவகனாய்!

போதும் என்றாலும்
உணவிடும் அன்னையாய்
ஓயாது அருள்
அளித்திடுவான் அன்புத்
தந்தையாய்!

நெருப்பைத் தவறி
மிதிக்கும் முன்னே
தட்டி விடுவான்
தோழனாய்!
மீறி தொடர்ந்தால்
தலையைக் குட்டிடுவான்
ஆசிரியனாய்!
பின்னே
கொப்பளங்களை அவனே
குணப்படுத்துவான்
களிம்பாய்!

மழலையின்
உறக்க சிரிப்பில்
மறந்து போகும்
உலகமாய்....
உன்னை தொழும்
நாங்களும்!

No comments: